Wednesday 6 October 2021

குறுங்கதைகள்-ஒற்றுமை







அவன் தன்னைப் போல் தோற்றமுள்ள ஒருவனைச் சந்தித்தான். ஒரே மாதிரி தோற்றம் இருப்பவனைப் பார்த்த இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய மனைவி தோற்ற ஒற்றுமை உடையவனைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள். தன் தோற்ற ஒற்றுமையாளனுக்கு நல்ல விருந்தைப் படைத்து மகிழ்ந்தான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். தோற்ற ஒற்றுமை கொண்டவன் அடிக்கடி இவன் வீட்டுக்கு வரத் தொடங்கினான். சில சமயங்களில் இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்திருந்தார்கள். இவனுடைய மனைவிக்குக் கணவன் யாரெனக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு நாள் இவன் ஊரில் இல்லாத போது தோற்ற ஒற்றுமையாளன் இவன் வீட்டுக்கு வந்தான். இவனுடைய மனைவிக்குக் குழப்பமாக இருந்தது. வந்திருப்பது யாரெனத் தெரியவில்லை. வந்தவுடன் அவன் இவளிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஏன் ஏமாற்றினாள் என்று கேட்டான். திருமண நாளன்று குடும்பத்தில் ஏற்பட்ட நெருங்கிய உறவினரின் மரணம் காரணமாக அவர்களின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதை இவள் நினைவு கூர்ந்தாள். அதன் பின் இவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு போய் வந்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டான். இடையில் இப்போது கணவனாக இருப்பவன் இவளுடைய குடும்பத்தாரைச் சந்தித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான். தோற்ற ஒற்றுமை காரணமாக இவன் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டதாகச் சொன்னதை அவர்களும் நம்பிவிட்டார்கள். திருமணம் முடிந்தவுடன்தான் தன் கணவனாக வந்தது வேறொருவன் எனப் புரிந்துகொண்டாள். தான் ஏமாற்றப்பட்டதையோ தோற்ற ஒற்றுமை உள்ள வேறொருவனைத் திருமணம் செய்ய விரும்பியதையோ கணவனிடம் இவள் சொல்லவில்லை. இவன் இதைக் கேட்டு அவன் ஆத்திரமடைந்து இவளுடைய கணவன் ஊரிலிருந்து வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச் சென்றான். கணவன் ஊரிலிருந்து வந்தவுடன் நடந்தை எல்லாம் கூறிவிட்டாள். இவள் கணவன் தன் தோற்ற ஒற்றுமையாளனை அழைத்து தன் மனைவியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டான். இருவரும் ஓர் அறைக்குச் சென்று குடித்து தங்கள் மன உளச்சலைத் தீர்த்துக் கொண்டார்கள். காலையில் இவள் எழுந்து அவர்களின் அறைக்குப் போய்ப் பார்த்தாள். ஒருவனைக் காணவில்லை. ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். கடிதம் ஒன்று மேஜையில் இருந்தது. இவளுடைய கணவன் எழுதியிருந்தான். வெளிநாட்டில் வேலையில் இருந்தபோது இந்தத் தோற்ற ஒற்றுமையாளனைப் பார்த்ததாகவும் அவன் இவனைப் பார்க்கவில்லை என்றும் அவனைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து இப்படித் திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து இங்கு வந்து ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும் தன் மீது தான் தவறு இருப்பதாகக் கூறி இனி அவள் அவனுடன் வாழலாம், தான் அவள் வாழ்வில் குறுக்கிடப் போவதில்லை என்றும் எழுதியிருந்தான்.   

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...