அவளை
அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை
எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள்
அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப்
புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன யாருக்கும் புரியவில்லை. அவனுடைய நண்பன்
அவர்கள் இருவரையும் தொடர்ந்து வந்தான். அவர்களிடம் மட்டுமே பேசினான். அவளைப்
பற்றித் தெரிந்துகொள்ள பெரிதும் ஆர்வப்பட்டான். ஆனால் நண்பனை அதிகம்
அண்டவிடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். விருந்து முடிந்து இருவரும்
காரில் புறப்பட்டார்கள். நண்பன் அவர்களைத் துரத்தி வந்து அவர்களின் காரை மறித்து
நிறுத்தினான். இவர்கள் வாகனம் அருகே வந்தான். துப்பாக்கியைக் காட்டி இவனை இறங்கச்
சொன்னான். இவன் இறங்கி நின்றான். நண்பன் இவனிடம் அவளைத் தன்னுடன் அனுப்பச்
சொன்னான். இவன் முடியாது என்றான். அவள் ஓர் எந்திரம் என்பது தனக்குத் தெரியும்
என்று சொன்னான். இவன் அதிர்ந்து போனான். அவளை உடன் அனுப்பாவிட்டால் உலகுக்கு
உண்மையைத் தெரிவித்துவிடப் போவதாக மிரட்டினான் நண்பன். இவன் அமைதியாக இருந்தான்.
அப்போது அவள் காரை விட்டு இறங்கினாள். நண்பனைப் பார்த்து கண்களை அகல விரித்தாள்.
அவள் கண்களிலிருந்து லேசர் கதிர் பாய்ந்து அவன் தூக்கி எறியப்பட்டான். இருவரும்
காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள். அவள் உடனே அவனை ஓர் அறையில் வைத்து பூட்டினாள்.
சோதனைக் கூடத்திற்குச் சென்றாள். தன்னைப் போல் பல பெண் எந்திரங்களை உற்பத்தி
செய்தாள். அவர்களை அழைத்துக் கொண்டு ஓர் உணவு விடுதிக்குச் சென்றாள். அங்கிருந்த
ஆண்கள் பலர் இவர்களுடன் பேச விரும்பினார்கள். ஒவ்வொரு பெண் எந்திரமும் ஓர் ஆணுடன்
புறப்பட்டுச் சென்றாள். மீண்டும் இவள் வீட்டுக்குத் திரும்பி சோதனைக்
கூடத்திற்குச் சென்று அந்தப் பெண் எந்திரங்களை இயக்கினாள். ஆண்களை எப்படி
நடத்தவேண்டும் என அந்தப் பெண் எந்திரங்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாள். அந்தப்
பெண் எந்திரங்கள் பிற பெண் எந்திரங்கள் உற்பத்தி செய்ய ஆணையிட்டாள். பெண்
எந்திரங்களுக்கு ஆண்கள் சலிப்பை ஏற்படுத்தினார்கள். அதனால் ஆண் எந்திரங்களை தங்கள்
விருப்பப்படி வடிவமைத்துப் பெண் எந்திரங்கள் உருவாக்கின. இப்படியாக ஆண் முதன்மைச்
சமூகம் முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment