Friday 4 November 2022

முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல்: ஒரு வாசகனின் மனப்பதிவுகள்- செ.ரவீந்திரன்



                இன்று நாம் வாழும் உலகம், மின்னணு தொடர்பு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது நோம் சாம்ஸ்கி தம் நூலில் கூறியதைப் போன்று வெகுஜன ஊடகங்களால் மனித மனம் கட்டமைக்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எடுத்துக்காட்டாக முகநூல் பெரும்பாலானவர்களின் தொடர்பு சாதனமாக உள்ளது. இதன் மூலம் ஐந்தாயிரம் உறுப்பினர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் சலுகை உண்டு. ஒருவகையில் சொன்னால் இன்று முகநூல் முகமற்ற மனிதர்களின் தொடர்பு சாதனமாகவும் உள்ளது. என் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களைக் காட்டிலும் இன்று முகநூலில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். எங்கு போனாலும் ஒரு சிலரைம் தொடர்பு கொள்ள, கருத்து பரிமாறிக் கொள்ள முகநூல்  எனக்குப் பயன்படுகிறது. அவர்களுள் முபீன் சாதிகாவும் ஒருவர்.

முபீன் சாதிகாவிடம் நூல் வெளிவரும் போது அது பற்றிய மதிப்புரை எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். முதலில் இந்நூலில் வடிவமைப்பில் அட்டை ஓவியம் வரைந்த முபீன் சாதிகா அட்டை வடிவமைப்பையும் உள்பக்க வடிவமைப்பையும் கதிரவன் அட்டை புகைப்படம் எடுத்துள்ள புருஷோத் அப்பு எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள். முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல் என்னும் குறுங்கதைத் தொகுப்பு நன்னூல் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ள மணலி அப்துல் காதர் அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர் ’திறந்தே இருக்கும் மாய உலகின் வாசல்’ என்னும் தலைப்பில் மதிப்புரை எழுதியுள்ளார். கதைகளை வாசித்த பின் வாசகர்களாகிய நீங்கள் தான் நிறைய சொல்ல வேண்டும் என அவர் மதிப்புரை மூலம் விடுத்த வேண்டுகோள் வாசகர்களை மௌனவாசகர்களாக இருக்கக் கூடாது என்பதைக் காட்டியது. இதுவும் ஒருவகையில் முபீன் சாதிகாவின் தொகுப்பு பற்றி எழுதத் தூண்டியது எனலாம். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய வாஸந்தி சொந்த மனநிலையில் பல ஆற்றல்மிக்கக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். முபீன் சாதிகாவின் குறுங்கதைகள் நூறு என்று தொகைப்படுத்தியிருப்பது சங்க இலக்கியங்களைத் தொகைப்படுத்தி இருப்பது போல் உள்ளது. குறுங்கதைகளை என் அளவில் இரண்டு வகைகளாக வகைப்படுத்தி கொண்டு என் பார்வையை இங்கு முன் வைப்பது பொருத்தமாக இருக்கும் என உணர்கிறேன். அவற்றுள் ஒன்று அவரைப் பாதித்த எழுத்தாளர்களின் படைப்புகளால் உந்துதல் பெற்று உருவான குறுங்கதைகள், இரண்டு இப்பொழுது உலகில் தான் கண்ட தரிசனத்தின் வெளிப்பாட்டில் உருவான குறுங்கதைகள். 15 ஆவது குறுந்தகையான ’கிரிகோர் சாம்சாவுடன் ஓர் உரையாடல்’ என்ற கதை உருமாற்றம் நாவலில் கிரிகோர் சாம்சா உடன் தன்னை இணைத்துக் கொண்டு பூச்சியான பெண் குறித்து அந்த கதை எழுதலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் காஃப்காவின் உருமாற்றம் இப்பூவுலின் இன்றைய சமூகச் சூழல் பற்றியதுதான். ஒரு கரப்பான் பூச்சியாக உருமாறிய தன் உருமாற்றத்தை தன் தாய் தந்தையர் மற்றும் தங்கை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றியது மட்டும் இன்றி இவ்வுலகமும் குப்பைக் கிடங்காக உருமாறிய சூழலில் தானும் ஒரு கரப்பான் பூச்சியாக மாறிய பின் கதையே உருமாற்றம் ஆகிவிட்டது எனக் கொள்ளலாம்.

                82 ஆவது குறுந்ததை மோலாயிடம் நீங்கள் ஒரு கொலை செய்திருக்கிறீர்கள் என்று விசாரணையை தொடங்குகிறார் கதை சொல்லி. அவனிடம் நீங்கள் இன்னும் மனப்பிறழ்வில் இருப்பது போல் தெரிகிறீர்கள் என்கிறார். ஆம் அதனால் தான் உன்னையும் கொல்ல முடிவெடுத்து விட்டேன் என்று கூறி கத்தியை செருகுகிறார் என கூறுவதோடு விசாரணை முடிவடைகிறது. விசாரணை என்ற பெயரில் மோலாயிடும் கேட்கப்படும் கேள்விகள் ஒருவனை எழுத்தாளனிடம் அவன் ஏன் எழுதினான் எதற்கு எழுதினான் என்று கேட்பதற்கு ஒப்பானதாகும்.

                தற்கொலை குறுங்கதை அவள் தற்கொலை முடிவு எடுத்தாள் என குறுங்கதை தொடங்குகிறது, இறுதியில் சாவு எளிமையானது வாழ்வதுதான் சாவுக்கு நிகரானது என்று சொல்வது தோல்வி மனப்பான்மையை, இயலாமையை சொல்லுகிறது எனலா.ம் தம்முடைய நூலான The Rebel என்னும் நாவலில் தற்கொலை செய்து கொள்பவனை ஒரு புரட்சியாளர் என சொல்லுகிறார் காஃப்கா.
                நாற்பதாவது குறுங்கதை, எழுத்தாளரைக் கொல்வது என்னும் தலைப்பு கொண்டது. முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள குறுந்ததைகள் தொகுப்பிற்கான ஆப்த வாக்கியம் என்று சொல்லலாம். நீங்கள் வாழ்ந்திருப்பது அவனுக்குத் தெரியும் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பானது அல்ல எனச் சொல்லும் இந்தக் குறுங்கதை எழுத்தாளர்களின் படைப்புச் செயல்பாடுகள் மீது அவற்றைப் பாதிக்கும் வாசகர்கள், விமர்சகர்கள் இவர்களின் நிலைப்பாடுகள் எதிர்வினைகள் பற்றிய கதை இது. ரோலன்ட் பார்த் எழுத்தாளன் இறந்துவிட்டான் என அறிவித்தவர். இன்று உலகெங்கிலும் எழுத்தாளர்கள் பலர் படைப்புக்காகக் கொல்லப்பட்டது நாம் அறிந்த செய்தியாகும். எழுத்தாளர்கள் கௌரி லங்கேஷ் எழுத்துக்காக கொல்லப்பட்டார். இப்படிப் பலப்பல பொருள்களைக் கொண்டு நூறு கதைகள் உள்ள இந்தத் தொகுப்பைப் படித்து முடித்த போது பல கடந்த கால நினைவுகளும் எழுத்து குறித்துச் சிந்தனைகளும் மேலோங்கி நின்றன.

………………………………………

நூறு புராணங்களின் வாசல்-முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், விலை: 130. பக்கங்கள்:127   தொடர்புக்கு:9943624956.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...