Sunday 17 September 2023

கருமேகங்கள் கலைகின்றன: தந்தைமையின் மறு உருவாக்க மொழி




தந்தைமை என்ற பரிணாம வளர்ச்சியைப் படைத்துக் காட்டியிருக்கும் படம் தங்கர் பச்சான் இயக்கியிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம். தந்தை முதன்மைச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இன்றைய குடும்ப அலகுகளில் தந்தைமை மதிப்பைப் பெறுவதும் இழப்பதும் உறவுகளின் நிர்ணயிப்புகளால்தான் என்பதைக் காட்ட இந்தத் திரைப்படம் பெரும் முயற்சி எடுத்திருக்கிறது. அத்துடன் தந்தைமையைத் தாங்கிப் பிடிக்கும் உணர்வுகளின் சிக்கல்கள் ஏற்படுத்தும் போராட்டத்தையும் உள்வாங்கியிருக்கிறது இந்தப் படம். இந்தத் திரைப்படத்தில் ஓடும் இழைகளைக் காலவெளி வரிசைப்படியும், உறவுகளின் அமைப்பு மாற்ற பரிணாம வளர்ச்சிப்படியும் அணுக முடியும்.

 

இந்தத் திரைப்படத்தில் இருக்கும் தந்தையர்கள்:

1.பாரதிராஜா
2.விபின் லால்
3.கௌதம் வாசுதேவ் மேனன்
4.யோகி பாபு
.....

கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற ஒரு பொதுவான தந்தைமையைப் பிரதிபலிக்கும் ஆசையில் குறைகளுடன் கூடிய தந்தைமையாக பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் தொடங்குகிறது. அதன் வீழ்ச்சியாகப் பல குறைகள் உள்ள விபின் லால் போன்ற தந்தைமையை நிறைவு செய்யாத பாத்திரமாக அடுத்த கட்டத்தை எட்டுகிறது. அதன் உச்சமாக பாரதிராஜாவின் பாத்திரமாக உருமாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் saturation pointஐ எட்டுவதாக யோகி பாபு என்ற அதிகாரப் பூர்வமற்றத் தந்தை பாத்திரம் இருக்கிறது. அது பகுதி நேர தந்தைமை என்ற நிலையை அடைவதுதான் பரிணாமம் எனலாம். தந்தைமையின் தேவை குறித்து பெரும் கேள்வி எழுப்புகிறது இந்தப் படம். அதன் அடிநாதமாக குடும்ப அமைப்பையே கேள்வி கேட்கிறது என்றும் சொல்லலாம்.

தாய்மை அல்லது பெண்மை என்று எதைக் காட்டுகிறது படம். இந்தப் படத்தில் பெண் பாத்திரங்கள் காட்டும் பெண்மையை வரிசைப்படுத்தலாம்.

1.அமுதவல்லி என்ற பாரதிராஜாவின் முன்னாள் காதலி
2.பாரதிராஜாவின் மனைவி
3.கௌதம் வாசுதேவனின் மனைவி
4.மீனாகுமாரி எனும் மஹானா
5.அதிதி
....

அமுதவல்லி என்ற பாத்திரம் குடும்பத்தை மீறிய உறவை வைக்கும் பெண்மை. அதனால் பாதிக்கப்படும் பெண். அதன் காரணமாகவே தந்தையாக உருமாறவேண்டிய பாத்திரமாகிறது. படத்தில் வராத பாத்திரம் இது.

பாரதிராஜாவின் மனைவி திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்த கணவனை ஏற்றுக் கொள்ளும் பாத்திரம். படத்தில் வராத பாத்திரம் இது.

கௌதம் வாசுதேவனின் மனைவி நீக்குப்போக்குக் காட்டும் பெண்.

குடும்ப உறவு சரியாக இல்லை என்றால் குடும்பம் தேவை இல்லை என்று முடிவெடுக்கும் பெண் மஹானா.

இந்தப் பெண்மைக்கு எல்லாம் உச்சமாக மாறியிருப்பது அதிதி.
இந்தப் பாத்திரம் வழி தவறும் தந்தைமையை ஏற்கவில்லை. அந்தப் பாத்திரத்திற்குக் குடும்ப உறவுக்கான தேவை இல்லை. எல்லா மீறல்களாலும் வழிதவறுதல்களாலும்  பிறந்துவிட்ட குழந்தைகளைக் காப்பாற்றினாலே போதும், குடும்பம் இனி தேவை இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்ட பெண்மைதான் அதிதி பாத்திரம் என்பதாகப் படம் வரையறுக்கிறது.

தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு மீறிய உறவுகளைப் பார்த்துப் பழகிவிட்டது. இந்தப் படம் அதையே வேறொரு தளத்தில் பேசுகிறது. இன்னும் சொல்லப் போனால் அறம் சார்ந்த சொல்லாடல்களில் அதை இயல்பாக்கம் normalise செய்யப் பார்க்கிறது. அதன் விளைவு குடும்ப அமைப்பு உடைதல் என்பதையும் படம் காட்டிவிடுகிறது.

 

இந்தத் திரைப்படத்தில் இரண்டு இழைகளைக் கொண்டு தந்தைமையின் பரிணாம வளர்ச்சி காட்டப்படுகிறது. முதல் இழை பாரதிராஜாவின் கடந்தகால பழைமையைப் பற்றியது. வழி தவறுதல் நடைமுறையில் இருப்பதைக் காட்டிய இழை இது. இரண்டாவது இழை யோகி பாபுவின் நிகழ்கால இழை. இதில் வழி தவறுதலுக்கான சாத்தியம் இருந்தாலும் கூட அதைத் தேர்ந்தெடுக்காத ஒழுக்க இழையாக இது இருக்கிறது.

 

யோகிபாபு ஏற்படுத்திக் கொள்ளும் தந்தைமை என்பது தற்காலத்திற்கான ஒரு மாதிரி தந்தைமை. இதில் குடும்பத்தின் பொறுப்புகள் சுமையாக இருக்காது. விரும்பும் வரை இருக்கும். விரும்பாவிட்டால் விலகும் என்ற தளர்வுடன் கூடிய அமைப்பில் இருக்கும் தந்தைமை. இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான தந்தைமையாக இது இருக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்தச் சமூகப் பாத்திரத்திற்குள் வரலாம். விலகலாம். இது பாரதிராஜாவின் காலத்து தந்தைமையைப் போல் நெருக்கும் கயிறல்ல. தற்காலத்து சுதந்திரத்தை முன்வைக்கும் நெகிழி. முந்தைய காலத்து உணர்ச்சிகள், தவிப்புகள் எல்லாம் இதில் இருக்கும். அல்லது இருப்பது போலச் செய்து காட்டும். Simulate செய்யும்.

 

இந்த இரண்டு இழைகளில் யோகி பாபுவின் இழை ஓர் ஓவியம் போல் இருக்கிறது. அதைக் கண்டு பாரதிராஜாவின் இழையை வரைந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்திக்கச் சொல்கிறது படம். கடலில் மூழ்கி பழங்காலத்தின் மதிப்பை மீண்டும் நிர்ணயிக்கலாம். அல்லது கடலிலிருந்து விலகி வந்து குற்றவுணர்வுடன் மீண்டும் தந்தமையைத் தொடரலாம்.

 

இந்த இரண்டு இழைகளுமே எதார்த்தம் போல் சித்தரிக்கப்படுகின்றன. பாரதிராஜாவின் பாத்திரத்தையும் யோகிபாபுவின் பாத்திரத்தையும் இரண்டு எதார்த்தக் கோடுகளாக வரைந்து ஒன்று மற்றொன்றிற்கு எதிரானதாக இருப்பது போன்றக் கற்பனையை உருவாக்குகிறது படம்.

 

இந்த இரண்டு இழைகளைக் கொண்ட படத்தின் மொழி, பார்வையாளர்களுக்குள் இருக்கும் மொழியைச் சந்திக்கும் போது, மீண்டும் உறவின் மீதான பிடிப்பு குறித்த வரையறையை உருவாக்குகிறது. அதனால்தான் அதிதி பழங்காலத்து தந்தைமையை ஏற்க முடியாத இக்காலத்துப் பாத்திரமாகிறது. இது, தந்தமையைப் போலச் செய்யும் யோகி பாபுவை ஏற்க முடிகிற பாத்திரமாகிறது. தாயையும் தந்தையாகவே பார்த்த பாத்திரம் அதிதி. அதனால் இனியும் தந்தைமைக்கான அவசியம் இல்லாத நிலையில் இருக்கிறது.

 

இந்தக் கதைக்குள் இருக்கும் இடம் இந்தப் படத்தில் உள்ள இந்த இரண்டு இழைகளை இரண்டாகப் பிரிக்கிறது. ஒன்று, குடும்பத்தின் தேவையைக் காட்டுவது. எனவே படத்தில் காட்டப்படும் குடும்பம் ஒரு சொகுசான கூரை. மற்றொன்று, அது இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் ஆசிரமம் எனும் குடை.  அதுவும் நிலத்தின் கடைக் கோடியில், ராமேஸ்வரத்தில் கிடைக்கிறது.  இந்த இரண்டு இடப் புள்ளிகளுக்கு இடையே சமுகத்தைக் கதையாக நகர்த்தியிருக்கிறது படம்.

 

காலவெளி சார்ந்த இரண்டு இழைகளைக் கிடைக்கோடாகவும் குத்துக்கோடாகவும் பாவித்தால் இரண்டும் வெட்டும் புள்ளியாக அதிதி பாத்திரமும் யோகி பாபு பாத்திரமும் இருக்கின்றன. மேலும் இந்த இரண்டு இழைகளும் பழமையையும் புதுமையையும் காட்டுவதால் இரண்டுமே சாமான்ய மொழியில் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒன்றுக்கு மற்றொன்று என்ன பொருளைத் தருகிறது என்பதுதான் இதில் இருக்கும் பின்நவீன மொழி. அதுதான் நேர்க்கோடல்லாத கதை மொழியாகிறது. Non-linearity கொண்ட கதையாகிறது இந்தப் படம். பழமை கிடைக்கோடாக இருந்தால் புதுமை செங்குத்துக் கோடாக இருக்கும். பழமையின் மறந்து போன அறம் புதுமையில் மீண்டு வந்து உயிர்த்தெழும்.

 

தந்தைமையிலிருந்து பிறழ்வது குறித்தக் குற்றவுணர்வை வெளித்தள்ளும் வடிகாலாக இந்தத் திரைப்படத்தின் மொழியை உள்வாங்கலாம். அல்லது பிறழ்வுகள் இயல்பான பின் அவற்றின் நினைவுகளிலிருந்து வெளியேறும் வடிகாலாகவும் பார்க்கலாம். அறத்தின் பாற்பட்ட சொல்லாடலில் கிளைத்திருக்கும் இந்தப் படத்தின் திரைமொழி சமூகத்தின் மௌன உருமாற்றத்தைக் கோருகிறது.   


#கருமேகங்கள்கலைகின்றன

  

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...