Thursday 12 August 2021

குறுங்கதைகள்-சமையல்






அவள் பல விதமான சமையல் வகைகளைச் செய்வதில் பெயர் பெற்றவள். என்னை வீட்டுக்கு அழைத்திருந்தாள். இதுவரை நான் பார்த்தேயிராத பல உணவு வகைகளைச் செய்து வைத்திருந்தாள். இந்த உணவு வகைகளைச் செய்ய அவளே காட்டுக்குச் சென்று பல வகையான காய், கனிகளைப் பறித்துக் கொண்டு வந்ததாகச் சொன்னாள். அந்த உணவு வகைகளின் நிறமும் மணமும் அருமையாக இருந்தன. அவற்றைப் பரிமாறிக் கொண்டே ஒவ்வொரு காய்கறி குறித்தும் சொல்லிக் கொண்டே வந்தாள். அதில் ஒன்று முட நோயை குணமாக்கும் எனவும் கரடிக்கு மிகவும் பிடித்த காய் அது என்றும் கூறினாள். மற்றொரு கனி நோய்களைத் தீர்க்கும் என்றாள். அது நரிக்குப் பிடித்தது என்றாள். இன்னொன்று ரத்தத்தை அடர்த்தியாக்கவிடாதாம். அது யானைக்குப் பிடித்தது என்றும் கூறினாள். இதே போல பல காய், கனிகளைக் குறித்தும் சொன்னாள். இந்த உணவு வகைகளைத் தயாரிக்க அவள் பல காட்சி ஊடகங்கள் பார்ப்பது நூல்களைப் படிப்பது என்று நேரத்தைச் செலவழித்ததாகக் கூறினாள். எப்படியாவது வித்தியாசமான சமையல் கலை நிபுணர் ஆவது என்பது மட்டுமே அவளுடைய இலக்கு என்று கூறினாள். அவற்றின் ருசி நாக்குக்குப் பழக்கப்படாத ஒன்றாக இருந்தது. ஒரு கட்டத்தில் உண்ணவே இயலாத அளவுக்குத் துவர்ப்பும் கசப்பும் கலந்து விஷம் போல் மாறிவிட்டது. அதைச் சொன்னால் அவள் வருந்துவாள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன். தன் சமையல் திறமை குறித்து என் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்தாள். உலகத்திலுள்ள எல்லா நாட்டுக்காரார்களுக்கும் உகந்த சமையலைச் செய்யக் கற்றுக் கொண்டுவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தாள். அடுத்து ஒரு வகை இருப்பதாகவும் அதை யாரிடமும் இது வரை கூறியதில்லை என்றும் என்னிடம் மட்டும் ரகசியமாகச் சொல்வதாகத் தெரிவித்தாள். ஓர் இரவு என்ன சமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு வேற்றுக்கிரகவாசி ஒரு புதிய வகை சமையலைச் சொல்லியதாகவும் அதைச் சர்வதேச சமையல் போட்டி ஒன்றில் செய்து அசத்தப் போவதாகவும் பெருமையுடன் கூறினாள். தன்னுடைய இலட்சியமே அந்தச் சமையல் வகையைச் சாப்பிட்டவர்கள் அது போன்ற உணவை உண்டதில்லை, இனி உண்ணப் போவதும் இல்லை என சொல்லிவிட்டுச் சாகவேண்டும். அதைத் தான் பார்க்கவேண்டும் என்றும் கூறிவிட்டு அதைத்தான் எனக்குச் சமைத்து கொடுத்ததாகவும் தன் சமையல் எப்படி இருந்தது என்றும் கேட்டாள். இது போன்ற உணவை உண்டதில்லை இனி உண்ணப் போவதும் இல்லை என்றேன்.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...