Sunday 15 August 2021

குறுங்கதைகள்-நட்சத்திரம்

 





அவளும் அவள் பொம்மையும் முதல் முறையாக அந்த அழகான நட்சத்திரத்தைப் பார்த்தனர். அப்போதிலிருந்து அந்த நட்சத்திரக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தனர். அவள் தன் பொம்மையிடம் அதற்கான வழி ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டாள். பொம்மை கடினமான நூல் ஏணியைக் கட்டி நட்சத்திரம் வரை போய்வரலாம் என்றது. அவளும் பொம்மையும் இணைந்து நூல் ஏணியைக் கட்டத் தொடங்கினார்கள். மிக உயரமாக இருக்கவேண்டும் என்றது பொம்மை. பல நாட்களாக அதைக் கட்டி முடித்தார்கள். அதில் ஏறத் தொடங்கினார்கள். நடுவில் அவர்களுக்குப் பயம் வந்தது. இங்கிருந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று இவள் கேட்டதற்கு பொம்மை அவளுக்குத் துணிச்சல் தந்து ஏறவைத்தது. அந்த நட்சத்திரத்தை அடைந்த பின் நடக்கப் போவதை மட்டும் சிந்திக்கச் சொல்லி பொம்மை தைரியம் கொடுத்தது. எப்படியோ ஒரு வழியாக இருவரும் அந்த நட்சத்திரத்தை அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் அது ஒரு சொர்க்கம் போல் இருந்தது. அங்குத் தின்பண்டங்களும், விளையாட்டுப் பொருட்களும், நீரூற்றுகளும் நிரம்பி காணப்பட்டன. அவர்கள் இருவரும் அங்குப் பெரு மகிழ்வுடன் கழித்தார்கள். சில நாட்கள் கழிந்த பின் அந்த நட்சத்திரத்தின் உரிமையாளரான அசுர விலங்கு அங்கு வந்துவிட்டது. அவர்கள் இருவரையும் கண்டு கோபமடைந்த அந்த விலங்கு அவர்கள் இருவரையும் உண்ணப் போவதாகச் சொன்னது. பொம்மை அந்த விலங்கிடம் நாங்கள் இருவரும் பாடுபட்டு இங்கு வந்திருக்கிறோம் எங்களை எங்கள் இடத்திற்கு அனுப்பிவிட்டால் நன்றியுடன் இருப்போம் என்றது. அவர்கள் இருவரும் அங்கு வந்ததற்கு என்ன தண்டனைத் தருவது என்று விலங்கு கேட்டது. பொம்மை தங்கள் இடத்திற்கு வந்து தேவையானதை எடுத்துச் செல்லுமாறு கூறியது. விலங்கும் அதற்கு ஒப்புக் கொண்டது. அவர்கள் இருவரும் தங்கள் இடத்திற்கு மீண்டு வந்தார்கள். உடன் விலங்கும் வந்தது. அவர்கள் இடத்தில் பசி, பிணி, பட்டினி என்ற நரகத்தின் அத்தனைக் காட்சிகளையும் கண்ட விலங்கு அவளையும் பொம்மையையும் தன் நட்சத்திரத்திற்கு அனுப்பிவிட்டு அவர்கள் இடத்திலேயே தங்கிவிட்டது.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...