Sunday 29 August 2021

குறுங்கதைகள்-பரமார்த்த குரு*வின் சீடன் குருவான போது…



 

பராமார்த்த குருவுக்கு ஐந்து சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் மட்டி. அவன் தன்னுடைய குருவை விட அதிக ஞானம் பெற்றுவிட்டதாகக் கருதினான். அதனால் தன் போக்கில் தனி மடத்தைத் தொடங்கி சீடர்களைச் சேர்த்தான் மட்டி. சந்தேகம் கேட்க வந்த பொது மக்களுக்கு ஆலோசனை கூறத் தொடங்கினான். அவனுடைய இறந்து போன பெற்றோர் அவனுக்குத் துணை நிற்பதாகக் கூறிக் கொண்டான். அவனுடைய சீடன் ஒருவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான். ஏன் ஒருவருடைய முகம் கண்ணாடியில் பிரதிபலிக்கையில் எதிராகத் தெரிகிறது நேராகத் தெரிவதில்லை என்றான். மட்டி அதற்குக் கண்ணாடியைத் திருப்பி வைத்துப் பார்த்தால் நேராகிவிடும் என்று விடை கூறிவிட்டான். கண்ணாடிக்குள் செல்ல முடியுமா என்று மற்றொரு சீடன் கேட்டான். செல்லலாம் அதற்கு நம் உடல் கண்ணாடி போல் ஆகவேண்டும் என்றான் மட்டி. கண்ணாடி பிம்பத்தை உடைத்தாலும் நாம் ஏன் உடைவதில்லை என்றான் வேறொருவன். கண்ணாடி பிம்பத்தை உடைத்தால் பல நூறாகப் பெருகும் நம்மால் பெருக முடியாது என்றான் மட்டி. எல்லா கண்ணாடிகளும் ஒரே மாதிரியான பிம்பத்தைக் காட்டுவதில்லையே ஏன் என்றான் ஒரு சீடன். எல்லா நேரத்திலும் நாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றான் மட்டி. கண்ணாடி முன் நாம் நிற்கும் போது நம்மை மட்டுமே அது ஏன் பிரதிபலிக்கிறது, நாம் நினைப்பவற்றை ஏன் பிரதிபலிப்பதில்லை என்று கேட்டு குருவை மடக்கிவிட்டதாக மகிழ்ந்தான் ஒரு சீடன். அப்படி நினைப்பவற்றைக் காட்டினால் நாம் மறுத்துவிடுவோம் என கண்ணாடிக்குத் தெரியும் என்றான் மட்டி. நீங்கள் கண்ணாடியா என்று கேட்டான் ஒரு சீடன். நாம் அன்றாடம் நம்முடைய கண்ணாடிகளாகத்தான் இருக்கிறோம் என்றான் மட்டி. ஆனால் உங்களை நான் பார்த்தால் நான் ஏன் தெரிவதில்லை என்றான் சீடன். நான்தான் நீ என்றான் மட்டி.


*வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையின் பாத்திரங்கள் இங்கு மீண்டும் எடுத்தாளப்படுகின்றன.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...