Sunday 29 August 2021

குறுங்கதைகள்-எழுத்தாளரைக் கொல்வது



 

நீங்கள் வாழ்ந்திருப்பது அவனுக்குத் தெரியும். நீங்கள் தொடர்ந்து கதைகளை எழுதி பலரையும் அதில் வாழ வைக்கிறீர்கள் என்பதால் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பானதல்ல. அவன் இது போன்ற உங்களின் கற்பனையைத்தான் ரசிப்பதில்லை. ஒரு நாள் நீங்கள் அவனால் கொல்லப்படுவீர்கள். இது எச்சரிக்கை அல்ல. நடக்கப் போவது. உண்மையானது. ஏன் கொல்லப்படுவீர்கள் எனத் தெரியுமா? நீங்கள் கண்ட மனிதர்களின் குணாம்சங்களைப் பற்றிப் படைப்பதால் கொல்லப்படுவீர்கள். பாத்திரங்களைப் படைப்பதாகச் சொல்லிக் கொண்டு உங்களையே படைத்துவிட்டு பாத்திரங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் காட்டிக் கொள்வதால் நீங்கள் கொல்லப்பட  வேண்டியவர் ஆகிறீர்கள். உங்கள் கதைகள் உண்மை சம்பவங்களைப் போலச் செய்தவை என்பதால் அவற்றின் நீங்கள் கட்டுப்படுத்துவதாக நீங்கள் எண்ணுவதன் காரணமாக நீங்கள் சாகவேண்டியவர். எழுத்தாளராக இருப்பது அடுத்தவர்களின் மூளையில் ஏதோ ஒரு தேவையற்ற குப்பையைச் சேகரிப்பதுதான் என்பதை ஒரு நாளும் உணராமல் இருந்ததற்காக நீங்கள் கொல்லப்படுவீர்கள். உங்களை வாசிக்கும் அப்பாவிகள் உங்கள் கதைகளை அவர்களுக்கு ஏற்றது போல் எழுதிக் கொள்கிறார்கள். அதற்குப் பொறுப்பெடுக்காமல் இருந்ததற்காகக் கொல்லப்படுவீர்கள். உங்களை விட உங்களுடைய வாசகர்கள்தான் உங்கள் கதைக்குப் பொருள் சேர்க்கிறார்கள் என்பதை உணராமல் நீங்கள் இருந்ததற்காகக் கொல்லப்பட போகிறீர்கள். உங்கள் வாசகர் உங்களை வாசிக்கும் போதே உங்களை பாதி கொலை செய்துவிட்டதை நீங்கள் அறியாமல் இருந்ததற்காகவும் இனிமேல் எழுத்தாளராகவே இருக்கப் போவதாகப் பிடிவாதம் பிடித்ததற்காகவும் உங்கள் வாசகனான அவனால் நீங்கள் கொல்லப்பட்டீர்கள்.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...