Friday, 27 August 2021

குறுங்கதைகள்-குறுவாள்





அவனிடம் மிகச்சிறிய குறுவாள் ஒன்று இருந்தது. பழைய இரும்புக் கடை ஒன்றில் அது கிடைத்தது. அதன் அழகில் சொக்கி அவன் அதை வாங்கிக் கொண்டான். அதன் முனையில் விஷம் தோய்த்து உறையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது பணம் தேவைப்பட்டால் கூட்ட நெரிசலில் புகுந்து யாராவது ஒருவரை அவர் அறியாமல் குத்திவிட்டு அவரிடம் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிடுவான். இப்படிச் செய்வதில் பணத்திற்காக இந்தக் கொலைகளைச் செய்தான் என்பதைவிட அந்தக் குறுவாளை வாகாகப் பயன்படுத்த முடிவதை எண்ணி இன்பம் அடைவதை நோக்கமாகக் கொண்டுதான் அவற்றைச் செய்தான். பணம் கையில் கிடைத்தவுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிடுவான். அன்று அப்படி ஒரு கொலையைச் செய்துவிட்டுத் திரைப்படம் பார்க்கத் திரையரங்கத்தில் வந்தமர்ந்தான். இடுப்பில் குறுவாள் இருக்கிறதா என அடிக்கடித் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். திரைப்படம் தொடங்கியது. அதில் வந்த கதாநாயகன் இவன் வைத்திருக்கும் அதே போன்ற குறுவாள் கொண்டு இவனைப் போலவே கூட்ட நெரிசலில் ஒருவரைக் கொலைச் செய்தான். அடுத்தடுத்து இவனைப் போலவே அதே வரிசையில் கொலைகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இருக்கையின் விளிம்பில் அமர்ந்திருந்த இவன் எழுத்து, தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை எனக் கூச்சலிடத் தொடங்கினான். அருகில் இருந்தவர்கள் அவனைப் பிடித்து இழுந்து இருக்கையில் அமரவைத்தனர். அவனுக்குக் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. திரையில் அடுத்து நடக்கப் போவதுதான் தனக்கும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் திரையை உற்று நோக்கினான். திரையில் கதாநாயகன் திரைப்படம் பார்க்கப் போய் அமர்ந்திருந்தான். அவன் குறுவாள் நழுவிக் கீழே விழுகிறது. அதைக் கவ்விய பெரிய எலி அவனுடைய ஒரு காலில் விஷமேறிய அந்தக் குறூவாளைக் குத்திவிட்டு ஓடி மறைகிறது. இருக்கையிலேயே அந்தக் கதாநாயகன் சாய்ந்துவிடுகிறான். தன்னுடைய குறுவாள் இருக்கிறதா என தொட்டுப் பார்த்தான். அது காணாமல் போய்விட்டிருந்தது.  

No comments:

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...