Tuesday 3 August 2021

குறுங்கதைகள்-பொம்மை




(அமெரிக்காவில் ராபர்ட் என்ற பொம்மை அமானுஷ்ய தன்மை பெற்றிருப்பதாகக் கருதி அதை ஓர் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். அதன் நினைவாக எழுதப்பட்ட கதை)


சிறுவன் போன்றிருந்த பொம்மை உயிர் பெற்றது. அந்தப் பொம்மையை வைத்திருந்த சிறுவன் பொம்மையானான். இந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிறுவனின் தாய் ரயில் முன் பாய்ந்து இறந்துவிட்டிருந்தாள். அந்தப் பொம்மைக் கண்காட்சியில் கிடைத்தது. மிகவும் ஆசைப்பட்டு அந்தப் பொம்மையை வாங்கி வந்த சிறுவன் தன்னைப் போலவே உடை உடுத்தி உணவு கொடுத்துப் பழக்கிவிட்டான். பெரும்பாலும் அந்தப் பொம்மையுடனேயே நேரத்தைக் கழித்தான். உறங்கும் நேரமும் உடன் உறங்கியது பொம்மை. சிறுவனின் தாய்க்கு இது எந்த வேறுபட்ட நடத்தையாகவும் தோன்றவில்லை. சிறுவன் பள்ளிக்குச் செல்ல மறுத்து பொம்மையுடன் நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான். சிறுவனை உருட்டி மிரட்டி பள்ளிக்கு விரட்டினாலும் பாடங்கள் அவனுக்கு ஏறவில்லை. பொம்மையைப் பிரிந்த ஏக்கம் ஆட்டிப் படைத்தது. வீட்டில் பொம்மையுடன் பேசிப் பேசி நெருங்கிய நட்பை உருவாக்கிவிட்டான். நண்பர்களை மறந்தான். வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதையே விரும்பினான். அதை அவனது தாய் விரும்பவில்லை. மகனைத் திருத்த ஒரு நாள் பொம்மையை ஒளித்துவைத்துவிட்டாள். மகன் பைத்தியமாகி அழுவதும் அலைவதும் அரற்றுவதும் காணச் சகிக்காமல் போனதால் மீண்டும் பொம்மையை எடுத்துக் கொடுத்துவிட்டாள். அதன் பின் பொம்மையை ஒரு நிமிடம் கூடப் பிரியாமல் இருந்தான் சிறுவன். அவனை வழிக்குக் கொண்டு வர பொம்மையை வைத்துக் கொள்வதால் அவன் கல்வியை மறந்து சீரழிந்து போவான் என எச்சரித்தாள். அந்தப் பொம்மை அவனை எல்லா சிரமங்களிலிருந்தும் காப்பாற்றும் எனச் சொல்லியிருப்பதாகக் கூறினான் மகன். தன்னைவிட அவனுக்குப் பொம்மை முக்கியமா என்று கேட்டாள். ஆம் என்றான் மகன். நாளை தான் இருக்கப் போவதில்லை, பொம்மை அவனைக் காப்பாற்றுமா என்று கேட்டாள். ஆம் என்றான். தாய் தன்னை விட்டுச் செல்வதை எந்தச் சலனமும் இன்றி பார்த்தான். பொம்மையாக மாறிக் கொண்டிருந்தான் அவன். சிறுவனாக மாறிவிட்ட பொம்மை அவனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...