Wednesday 1 September 2021

குறுங்கதைகள்-நினைவுச்சின்னம்





என் பாட்டிமார்கள் இறந்து போய் சில காலம் ஆகிவிட்டது. அவர்களின் உலகத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வரக் கிளம்பினேன். இருவரும் சேர்ந்து தாஜ்மகால் போன்ற ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்கு என்று கேட்டேன். எனக்காத்தான் என்றார்கள். என் மீது அன்பு செலுத்தும் நபர் இது போன்ற சின்னத்தை எழுப்ப முடியாமல் சிரமப்படலாம் அதற்காக இவர்கள் இதை எழுப்பி அந்த நபரிடம் கொடுத்து விடுவார்களாம். அந்த நபர் அதை எனக்குக் கொடுப்பாராம். என் பாட்டிமார்களின் பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என் பாட்டிமார்களுக்கு இத்தகைய நினைவுச் சின்னத்தை யாராவது எழுப்பியிருக்கிறார்களா எனக் கேட்டேன். அவர்கள் பரம்பரையில் யாரும் யாருக்கும் இது போன்ற சின்னத்தை எழுப்பியதில்லையாம். அந்தக் குறை எனக்கும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருப்பதாகச் சொன்னார்கள். அப்படி ஒரு நபரே இல்லாத போது நினைவுச்சின்னம் மட்டும் எதற்கு என்று கேட்டேன். எந்த நபரும் இல்லை என்றாலும் நினைவுச் சின்னம் அழியாமல் நின்று பல கதைகளைச் சொல்லும் என்றார்கள். அப்படி ஒரு நபரே வரமாட்டார் என்றால் இந்த நினைவுச் சின்னம் என்ன ஆகும் என்றேன். இந்த நினைவுச் சின்னத்தைக் கண்டவர்களால் என்னை விட்டு விலகவே முடியாதாம். என்னைவிட நினைவுச் சின்னத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டுவிடுபவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இருக்காது எனச் சொல்லிவிட்டு கிளம்பினேன். 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...