Friday, 24 September 2021

குறுங்கதைகள்-யார்


 



அவளைப் பெரிதும் விரும்பினான் அவன். பெரும் பாடுபட்டு அவளை மணமுடித்தான். அவளுடன் தனிமையில் முதன் முதலாக அந்த இரவில் இருக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவனை மகிழ்ச்சியில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அவள் வந்தாள். அவளைக் கண்டவுடன் அவனுக்கு வியர்த்தது. இதுவரைத் தான் பழகி வந்த பெண் இவள் இல்லையோ என ஒரு முறை சந்தேகம் அவனுள் வந்து போனது. அவளிடம் இயல்பாகப் பேசக் கூட அவனால் முடியவில்லை. அந்த அறையை விட்டு ஓடிவிடலாமா என நினைத்தான். அவளை அந்த நிமிடத்திலிருந்து வெறுக்கத் தொடங்கினான். இனம் புரியாத விரக்தி அவன் மனதில் குடி கொண்டது. அவள் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை பற்றி மட்டுமே மூளை யோசித்தது. அவளை அழைத்துக் கண்ணாடி முன் நிறுத்தினான். அதில் பாம்பும் பெண்ணும் இணைந்த பிம்பம் தெரிந்தது. அவனுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. இருந்தாலும் அவளிடமிருந்து தப்பிக்க என்ன வழி இருக்கிறது என எண்ணிப் பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பினாள். நாம் இருவரும் நம் இனத்தைப் பற்றி அறியாமலேயே ஒருவருடன் ஒருவர் எப்படி சரியாக உறவை உருவாக்க முடிவு செய்தோம் என்பதுதான் இப்போது வரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றாள். இவனால் அதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியவில்லை. நீ பாம்பு என்னை ஏமாற்றி மண முடித்திருக்கிறாய். நான் உன்னை விட்டு விலகுகிறேன் என்றான். அவள் ஒரு நிமிடம் என்று கூறி தன் கண்களை விரித்து அதில் அவனுடைய பிம்பத்தைப் பார்க்கச் செய்தாள். ஒரு பாம்பு படம் எடுத்து நின்றிருந்தது.

 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...