Saturday, 25 September 2021

குறுங்கதைகள்-கண்


 


ஒற்றைக் கண் மட்டும் வரையப்பட்ட அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்திருந்தது. அந்த ஓவியம் அது வரை நான்கு பேரிடம் கை மாறி வந்திருக்கிறது. அந்த ஓவியத்தில் ஒரே ஒரு கண் பெரிதாக வரையப்பட்டிருந்தது. அதை முதலில் வாங்கியவர் காணாமல் போய்விட்டார். அவரைத் தேடுவது இன்னும் தொடர்கிறது. மிகப் பெரிய செல்வந்தரான அவர் ஏன் காணாமல் போனார் என்பதற்கான எந்தத் துப்பும் இது வரை கிடைக்காமல் இருந்தது. அவரது வீட்டில் இருந்த அந்த ஓவியத்தைப் பார்த்த அவரது நண்பர் அதனை வாங்கிக் கொண்டார். அந்த இரவு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு பேச்சிழந்தார். அதன் பின் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரைக் காண வந்த மற்றொரு நண்பர் அந்த ஓவியத்தை வாங்கிச் சென்றார். அதை அவர் வீட்டில் மாட்டிவிட்டுத் திரும்பிய போது படிகளில் உருண்டு விழுந்து இறந்து போனார். அவரது சாவுக்கு வந்திருந்த அவரது நண்பர் அந்த ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு அதனை வாங்கிச் சென்றார். அடுத்த வாரம் அவருடைய தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு சொத்துக்களை இழந்தார். அந்த ஓவியத்தையும் ஏலத்துக்கு வைத்துவிட்டார். அந்த ஓவியம் அதுவரை யாரிடம் எல்லாம் இருந்தது எனப் பார்த்து அதனை ஏலம் எடுக்க வந்திருந்தவர்கள் விலை கூறிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு சிறுவன் அந்த ஓவியத்தை வாங்குபவர்களுக்குத் தீங்கு வந்து சேரும். இது வரை வாங்கியவர்களின் கதி என்னவாயிற்று என்று எடுத்துக் கூறி விளக்கினான். எல்லோரும் அவனை ஏளனப்படுத்தினர். அவன் அந்த ஓவியத்தில் இருக்கும் கண் சூனியம் செய்பவர்களுடையது என்றும் அதை வீட்டில் வைத்தால் அவர் வாழ்வில் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறினான். அந்தக் கணத்தில் அந்தக் கண் அந்த ஓவியத்திலிருந்து பிரிந்து அவன் அருகில் வந்தது. கூர்மையான பார்வையை அவன் மீது செலுத்தியது. அவன் தன்னிடம் ஒரு கண்ணாடியை வைத்திருந்தான். அதில் அந்தப் பார்வையைக் குவித்தான். அந்தக் கண் சுருங்கி அந்தக் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டது. அதனைத் தூக்கி வீசி எறிந்து உடைத்தான்.

 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...