Tuesday 28 September 2021

குறுங்கதைகள்-நிறம்


 


அவன் நிறங்களைக் குறித்து ஆய்வு செய்பவன். பல இடங்களுக்கும் சென்று இந்த ஆய்வைச் செய்து வந்தான். அந்த வகையில் ஒரு பழங்குடி இனம் இருக்கும் மலைக் குகைகளுக்குச் சென்று ஆய்வை நடத்தினான். அங்கிருப்பவர்களிடம் இயற்கையின் நிறங்களைக் குறித்துக் கேட்டான். அவர்களுக்கு நிறங்கள் என்றால் என்ன என்றே தெரியவில்லை. இவன் அவர்களுக்குப் புரியாத ஆனால் தீங்கு விளைவிக்கக்கூடிய ஏதோ ஒன்றைக் கேட்கிறான் என அவர்கள் நினைத்தார்கள். இவனைப் பிடித்துப் போய் அவர்களுடைய தலைவரிடம் விட்டார்கள். இவன் செய்த தவறைக் குறித்து விசாரித்த அந்தத் தலைவர் இவன் கேட்ட கேள்விகளைத் தன்னிடம் கேட்குமாறு பணித்தார். இவனும் அவருக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கலாம் எனும் எண்ணத்தில் வானத்தின் நிறம் என்ன என்றான். வானம் பல வகைகளில் காட்சி அளிக்கிறது. அதை நீ ஏன் ஒற்றைத் தன்மை கொண்டதாகப் பார்க்கிறாய் எனத் தலைவர் கேட்டார். பின் வேறு கேள்வி என்ன என்றார். இலைகளின் நிறம் என்ன என்றான். இலைகளின் இயல்பை ஒரு நிறத்தில் அடைத்துவிட நினைக்கிறாயா என்று தலைவர் மறுகேள்வி கேட்டார். மேலும் இப்படி எல்லா நிறங்களையும் பிரித்து நீ என்ன செய்யப் போகிறாய் என்றும் விசாரித்தார். அப்போது பழங்குடி இனத்தின் கூட்டம் அங்குக் கூடியிருந்தது. அங்கிருந்த ஒருவன் எழுந்து மனிதத் தோலின் நிறத்தையும் இவன் பிரிக்கிறான் தலைவரே என்றான். இது கடுங்கோபத்தைத் தலைவருக்குக் கொடுத்துவிட இவன் கண்களைக் கட்டி வைத்து சமைக்காத உணவைக் கொடுங்கள். இவன் நிறங்களை மறக்கும் வரை கண்களைக் கட்டி வையுங்கள் என உத்தரவிட்டார். சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் தலைவர் முன் அவன் கண்களின் கட்டு அவிழ்க்கப்பட்டது. அவன் முன் ஒரு வெள்ளை எலியை வைத்து இது  என்ன நிறம் என்று தலைவர் கேட்டார். நிறத்தைக் கூறினால் தண்டனைக் கிடைத்துவிடும் என அஞ்சி அது உங்கள் மனதின் நிறம் என்றான். உடனே தலைவர் என் மனதின் நிறத்தைக் கூட இவன் அறிந்திருக்கிறான். இவன் நிறங்களை மறக்கவே இல்லை. ஆயுள் முழுக்கக் கண்களைக் கட்டிச் சிறைப்படுத்திவிடுங்கள் எனத் தீர்ப்பளித்தார்.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...