அவன்
அந்தக் கண்ணாடியை ஒரு கண்காட்சியில் வாங்கினான். அங்குப் பார்த்த போது தலைகீழ்
பிம்பங்களைக் காட்டியது. தூரத்தில் இருக்கும் பிம்பங்களைக் காட்டவில்லை. அருகில்
வந்தால்தான் காட்டியது. இது வேடிக்கையாக இருக்கவே அதைக் கொண்டு வந்து வீட்டில் வைத்தான்.
அதில் தன் முகத்தைப் பார்த்தபோது நம்பவே முடியாத அளவுக்கு முகத்தை நேர்த்தியாகக்
காட்டியது. தன்னுடைய பிம்பம் தானா என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்தது. கொஞ்சம்
தொலைவு சென்றான். பிம்பம் அருகில் வந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓடி
அருகில் வந்தான். பிம்பம் தூரச் சென்று சிறியதாகிவிட்டது. இதில் ஏதாவது கணினி
இருந்து இத்தகைய வித்தைகளைக் காட்டவைக்கிறதா எனச் சந்தேகம் கொண்டான். மிக அருகில்
சென்று நின்றான். கண்களை மட்டுமே காட்டியது. கண்ணாடி மீது இவனுக்கு இப்போது
ஆற்றாமை வந்தது. ஏன் இயல்பான பிம்பத்தைக் காட்டவே காட்டதிருக்கிறது என்று
கேட்டான். நீ இயல்பாக இல்லாத போது பிம்பம் மட்டும் இயல்பாக இருக்குமா என இவனுடைய
பிம்பம் கண்ணாடியிலிருந்து பேசியது. இவன் சோர்ந்து போய் தூங்கிப் போனான். இரவு
தூக்கம் கலைந்துவிட்டது. கண்ணாடியைப் பார்த்தான். இவனுடைய பிம்பம் இவனை உற்று
நோக்கியவாறு இருந்தது. இந்தக் கண்ணாடியைக் காலையில் கொண்டு போய் உடைக்கவேண்டும்.
அல்லது அந்த விற்பனையாளனிடமே கொடுத்துவிடவேண்டும் என முடிவு செய்துவிட்டுத்
தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்த்த போது அந்தக் கண்ணாடியைக் காணவில்லை. அதன்
விற்பனையாளனைப் போய்ப் பார்த்தான். காலையில்தான் அவன் அந்தக் கண்ணாடியைக் திருப்பிக்
கொண்டு வந்து கொடுத்தான் மீண்டும் அந்தக் கண்ணாடி வேண்டுமா என விற்பனையாளன்
கேட்டான்.
No comments:
Post a Comment