Thursday 30 September 2021

குறுங்கதைகள்-வால் நட்சத்திரம்

 



அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி உருகி நீராகி ஆவியாகி போகும் வரை புல் பூண்டும் முளைக்காது. பனியில் வாழும் உயிர்கள் தவிர பிற எல்லாம் அழிந்துவிடும். இதுதான் அவன் வானியல் சாஸ்திரம் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது தெரிய வந்தக் கணிப்பு. இதிலிருந்து அவனுடைய கிரகத்தையும் அதில் இருக்கும் உயிர்களையும் காப்பாற்ற என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டதில் இரு யோசனைகள் அவனுக்குக் கிடைத்தன. கிரகத்தின் அடித்தகட்டில் வாழ்வதற்கான வழிகளைத் தேடுவது. இரண்டாவது வேறொரு கிரகத்திற்கு குடிபெயர்வது. பல விண்கலன்களை உருவாக்கி விண்வெளியில் சுற்றி வந்து பொருத்தமான கிரகத்தைத் தேடி குடியமரலாம் என்றும் அவனுக்குத் தோன்றியது. இதில் எது வேகமாக நடக்கும் எனப் பார்த்தால் பல விண்கலன்களை உருவாக்குவதுதான். ஆனால் எத்தனை பெரிய கலன்களை உருவாக்கினாலும் அத்தனை ஜீவராசிகளுக்கும் போதாது. எனவே ஒவ்வொரு உயிர்க்கும் தனித்தனியாக எளிமையாக இயக்குவது போன்ற ஒரு பறக்கும் எந்திரத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தான். அந்த எந்திரம் ஈர்ப்பு விசைக்கு எதிராக இயங்கக் கூடியதாகவும் காந்தவிசையோடு ஒத்திசைந்து நகரக் கூடியதாகவும் எடை மிகவும் குறைவானதாகவும் இருப்பது போல அவன் வடிவமைத்தான். அதன் பறத்தலை சோதிக்க தானே பறந்து பார்க்க முடிவு செய்தான். அவன் நினைத்தது போலவே மிகவும் திறனுடன் அது பறந்தது. அந்த எந்திரத்தில் விண்வெளியில் விருப்பமான வகையில் சுற்றி சுற்றி வந்தான். மேலும் அவன் இருக்கும் கிரகத்திலிருந்து வெகு தூரம் வந்துவிட்டான். அப்போது அவன் அந்த சிவப்பு வால் நட்சத்திரத்தைக் கண்டான். அதனருகே போனான். இவனை நோக்கி அது ஈர்க்கப்பட்டு வந்தது. இவன் சுற்றும் திசையில் அதுவும் பயணித்தது. இப்படியே இவன் சுற்றி சுற்றி வந்தால் வால் நட்சத்திரமும் தன் கிரகத்தை நோக்கி நகராது என்று புரிந்துகொண்டான். வால் நட்சத்திரத்தின் திசையை மாற்றி தன் கிரகத்தைக் காப்பாற்றிவிட்டதில் மகிழ்ச்சியடைந்து விண்வெளியில் சுற்றித் திரிந்தான்.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...