அந்தச்
சிறுவன் ஓர் அழகான மாயக் குதிரையை வளர்த்து வந்தான். அதில் பயணம் செய்து பல
இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்பி அதைக் கிளப்பினான். குதிரை சிறுவனிடம்
அந்தப் பயணம் மிகவும் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றது. அப்போது
வழியில் ஓர் அடர்ந்த காடு வந்தது. அந்தக் காட்டுக்குள் செல்லவேண்டாம். அது அவர்களுக்குப்
பல சிக்கல்களைத் தரும் என்றது குதிரை. ஆனால் சிறுவனுக்குச் சாகசங்களைச்
செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தக் காட்டிற்குள் போகலாம் என அடம் பிடித்தான். குதிரையும்
விருப்பமில்லாமல் அந்தக் காட்டுக்குள் அவனை அழைத்துச் சென்றது. அடர்ந்த
காட்டுக்குள் போனவுடன் அங்கு ஏராளமான நீல வண்டுகள் பறந்து கொண்டிருந்தன.
அவற்றிலிருந்து தப்பிக்க குதிரையும் இவனும் பெரிதும் பாடுப்பட்டார்கள். குதிரை
வேகமாக ஓடி அந்தப் பகுதியைக் கடந்தது. அடுத்து அவர்கள் நுழைந்த காட்டுப் பகுதியில்
குழந்தைகள் சிரிப்பது போன்ற ஒலி கேட்டது. இருவரும் அங்கே தங்கி இளைப்பாறினார்கள்.
எங்கிருந்து குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கிறது என அவர்களால் புரிந்து கொள்ள
முடியவில்லை. அங்கேயே அவர்கள் தூங்கிப் போனார்கள். சிறிது நேரத்தில் இருவரும்
அதிர்ச்சியில் எழுந்தார்கள். குழந்தைகளின் சிரிப்பொலி அழும் ஒலியாக மாறிவிட்டது.
அந்த இடத்தில் இருக்க முடியாதவாறு காதைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு அந்த ஒலி
பேரிரிசைச்சலாக அது கேட்டது. அங்கிருந்து குதிரை வேகமாக ஓடி மலையின் உச்சிக்கு
வந்து சேர்ந்தது. கீழே மிக ஆழமான பள்ளத்தாக்குத் தெரிந்தது. அங்கிருந்து அடுத்த
மலை முகட்டிற்குச் செல்லவேண்டும் என்றால் மூச்சைப் பிடித்துக் கொண்டு குதிரை பறக்க
வேண்டும். இவன் குதிரையிடம் கெஞ்சினான். குதிரையும் எப்படியோ பறந்து அடுத்த மலை
முகட்டிற்கு சிறுவனைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அங்கிருந்து இருவரும் நடந்து
வந்தார்கள். அந்த மலையின் இறுதியில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி விழுந்து
கொண்டிருந்தது. இருவருக்கும் வேறு வழியில்லை. அந்த நீர்வீழ்ச்சியில்
குதித்தார்கள். அது ஒரு நதியில் போய் பாய்ந்தது. இருவரும் நதியில் நீந்தி ஒரு
சமவெளிக்கு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த ஒரு மரத்தடியைச் சேர்ந்து தூங்கிப்
போனார்கள். சிறுவன் குதிரையை எழுப்பினான். இப்போதுதானே பயணித்து இத்தனைச்
சாகசங்களைச் செய்து வந்தோம் என்றது குதிரை. இன்னும் பயணம் தொடங்கவே இல்லையே
என்றான் சிறுவன். இதுவரைத் தான் கண்ட கனவிலிருந்து விடுபட்டு சிறுவனை அழைத்துக்
கொண்டு கிளம்பியது குதிரை. அப்போது வழியில் ஓர் அடர்ந்த காடு வந்தது. அதற்குள்
செல்ல அடம் பிடித்தான் சிறுவன்.
No comments:
Post a Comment