Saturday 4 September 2021

குறுங்கதைகள்-ஓவியர்


 



எனக்குப் பிடித்த ஓவியரின் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். இதுவரை பார்த்திராத ஒரு பெரிய பறவை ஒன்றை மிகப்பெரிய ஓவியமாக வரைந்திருந்தார். அதைப் பார்த்தப்பின் அதிர்ச்சியும்  கடும் துயரமும் எனக்குள் ஏற்பட்டன. அந்தப் பறவை என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. நான் அதன் அருகில் செல்லாமல் பின் வாங்கி அங்கிருந்து வந்துவிட்டேன். அடுத்த நாளும் அந்தக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு அங்குச் சென்றேன். அந்தப் பறவை என்னைப் பார்த்து நீ வருவாய் என எதிர்பார்த்தேன் என்றது. நான் அதனுடன் பேசவில்லை. நாளை மலை உச்சியில் இருக்கும் கோட்டைக்கு வா உன்னிடம் சில உண்மைகளைச் சொல்லவேண்டும் என்றது. எனக்கு அந்தப் பறவையின் பேச்சைக் கேட்டு அந்தக் கோட்டைக்குச் செல்லவேண்டுமா என்று அச்சமாக இருந்தது. என்றாலும் அது கூறப் போகும் உண்மைகள் ஏதாவது ஒரு வகையில் உதவும் என்பதால் அடுத்த நாள் அந்த மலை உச்சியில் இருந்த அந்தக் கோட்டைக்குப் போனேன். அங்கு அந்தப் பறவை ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தது. என்னை நீ பறவை என்று மட்டும் நினைத்துவிட்டாயா? நான்தான் உன் காதலன். அந்த ஓவியரின் ஓவியங்கள் மீது ஈடுபாடு கொண்டு என்னிடமிருந்து விலகிப் போக நீ நினைத்தாய். அதனால் அந்த ஓவியரைக் கொன்றுவிடத் தீர்மானித்தேன். அவர் வீட்டுக்குப் போய் அவரைக் கொல்ல முயன்றேன். அவன் என்னை வீட்டின் மேற்கூரையிலிருந்து தள்ளிவிட்டுவிட்டார். நான் காயமடைந்து எப்படியாவது தப்பிவிடலாம் என இந்த மலைக் கோட்டைக்கு வந்துவிட்டேன். அப்போது இடிவிழுந்து இறந்து போனேன். மீண்டும் அடுத்த ஜென்மம் எடுத்ததில் பறவையாகிப் போனேன். இப்போதாவது அந்த ஓவியரைப் பழிவாங்கலாம் என்று போனேன். அவர் என்னை பிடித்து ஓவியமாக்கிவிட்டார். அந்த ஓவியர் மீது நீ ஈடுபாட்டை விட்டுவிட்டால் நானும் உன்னைப் பின் தொடரமாட்டேன் என்றது. அப்போது அங்கு வந்த அந்த ஓவியர் அந்தப் பறவையைத் தன் கித்தானில் பிடித்துப் போனார்.  

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...