அரசன் தன்
நாட்டில் இருந்த மிகச்சிறிய ஓவியங்களை வரைந்து முத்திரை இடும் கலைஞர்கள்
அனைவரையும் அரசவைக்கு அழைத்து தனது மோதிரத்தில் அரசக் குறியீடான சிங்கத்தைப்
பதிக்கவேண்டும் எனவும் யார் மிகநேர்த்தியாகப் பதிக்கிறார்களோ அவர்களுக்குத் தக்க
சன்மானம் தரப்படும் எனவும் தெரிவிக்கிறான். ஆயிரம் கலைஞர்கள் வந்திருந்தார்கள். ஒரு
மாதத்தில் வேலையை முடிக்கவேண்டும் எனச் சொல்லப்பட்டது. அவர்களின் வீட்டுக்கு தங்க
மோதிரங்கள் வினியோகிக்கப்பட்டன. அந்த மோதிரங்களில் உள்பகுதியில் சிங்கத்தை வரைந்து
முத்திரை இடவேண்டியிருந்தது. மிகச்சிறிய பகுதியில் மிக நேர்த்தியாகவும்
துல்லியமாகவும் வரைந்து முத்திரை இடுபவர்களுக்கு அதிக சன்மானம் கிடைக்கும்
என்பதால் எல்லோரும் கவனமாக வரையத் தொடங்கினார்கள். அவன் திரும்பத் திரும்ப சிங்கம்
வரைந்து பார்த்தான். பித்தளை மோதிரத்தில் முத்திரையை இட்டுப் பார்த்தான்.
இருந்தாலும் அவனுக்குத் திருப்தி கிடைக்கவில்லை. அவன் பக்கத்துவீட்டில் ஒரு பார்வையற்ற
கலைஞன் இருந்தான். அவன் மிகவும் துல்லியமாவும் நேர்த்தியாகவும் சிங்கத்தை
வரைந்திருந்தான். அதை முத்திரை இடுவதிலும் கைத்தேர்ந்தவனாகவும் இருந்தான்.
அவனுக்குத்தான் சன்மானம் கிடைக்கும் என எல்லோருக்கும் புரிந்தது. அது இவனுக்கு
ஏற்புடையதாக இல்லை. அந்தப் பார்வையற்ற கலைஞனைச் சந்தித்தான். அவன் மிகவும்
திறமையானவன் என்பதைத் தெரிந்துகொண்டான். அவனிடம் கலையைப் பயின்றுவிட்டு பிறகு தங்க
மோதிரத்தில் முத்திரையை இடலாம் என்று எண்ணினான். அவன் வரைந்த சிங்கத்தைத் தொட்டுப்
பார்த்த பார்வையற்றவன் நேர்த்தி குறைவாக இருப்பதாகக் கூறிவிட்டான். எவ்வளவு
முயன்றும் இவனால் நேர்த்தியை அடையவே முடியவில்லை. அவனுக்கு இது மன உளைச்சலைத்
தந்தது. இறுதி நாள் நெருங்கிவிட்டது. என்ன செய்வது என யோசித்து பார்வையற்றவன் சிங்கத்தைப்
பொறித்துவைத்திருக்கும் தங்க மோதிரத்திற்குப் பதில் தான் முத்திரை
பதித்துவைத்திருக்கும் மோதிரத்தை மாற்றிவைத்துவிடலாம் எனத் திட்டமிட்டான். அன்று
அவன் வீட்டுக்குச் சென்று தன் மோதிரத்தை அங்கு வைத்துவிட்டு அவனுடையதை எடுத்துக்
கொண்டான். அரசவையிலிருந்து தங்க மோதிரத்தைக் கொண்டுபோக வந்தவர்களிடம்
கொடுத்துவிட்டான். அரசன் கலைஞர்களை அரசவைக்கு அழைத்து அவர்கள் முத்திரை இட்ட மோதிரத்தைத் திருப்பிக்
கொடுத்தான். அப்போது பார்வையற்றவனுக்கும் அவன் முத்திரை இட்ட மோதிரம் திரும்பி
வந்தது. அதைத் தொட்டுப் பார்த்த பார்வையற்றவன் அது தான் பொறித்த மோதிரம் அல்ல
என்று கூறிவிட்டான். அரசன் சன்மானம் கொடுப்பதற்காக வைத்திருந்த மோதிரத்தை எடுத்து
பார்வையற்றவனிடம் கொடுத்து அந்த மோதிரம் அவனுடையதா என்று கேட்டான். ஆம் என்றான்.
இவனை அழைத்து உண்மையைக் கேட்டான் அரசன். தன் தவறை ஒப்புக்கொண்டான். இனிமேல்
முத்திரை இடும் கலையை அவன் செய்யக்கூடாது எனவும் பார்வையற்றவனிடம் பணியாளாக இவன்
இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டான்.
No comments:
Post a Comment