Tuesday 12 October 2021

குறுங்கதைகள்-குண்டூசி





அவள் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் மேஜை மீதிருந்த குண்டூசி எழுந்து நின்றது. அவள் அதை அதிசயத்துடன் பார்க்க அது குண்டூசி அளவே உள்ள மனிதன் என்று  புரிந்தது. அவன் இவளுடைய வீட்டுப் பாடத்தைத் தான் எழுதித் தந்துவிடுவதாகவும் தனக்கு ஒரே ஒரு துளி தேன் மட்டும் கொடுத்தால் போதும் என்றான். அவள் ஓடிச் சென்று தேனை எடுத்து வந்து அவனுக்குக் கொடுத்தாள். அவள் போய் வருவதற்குள் அவளுடைய வீட்டுப் பாடத்தை எழுதி முடித்துவிட்டிருந்தான். அவள் மிகவும் பரவசப்பட்டு அந்தக் குண்டூசி மனிதன் வேறென்ன அதிசயத்தை எல்லாம் செய்வான் எனக் கேட்டாள். அது போகப் போக அவளுக்கே தெரியும் என்றான் குண்டூசி மனிதன். இவளுடைய பரவசத்தைக் கண்ட இவளது தாய் வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டாளா எனக் கேட்டாள். இவள் குண்டூசி மனிதன் பற்றி தாயிடம் சொல்லவில்லை. அந்த மனிதனை எடுத்து ஒரு தீப்பெட்டியில் போட்டு வைத்துவிட்டுத் தூங்கப் போனாள். காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டாள். மாலை வந்து பார்த்தால் அந்தத் தீப்பெட்டியைக் காணவில்லை. இவள் வீடு முழுக்கத் தேடிப் பார்த்தாள். அது கிடைக்கவில்லை. இவளுக்கு அழுகையாக வந்தது. வீட்டைச் சுற்றி வெளியில் தேடிப் பார்த்தாள். குப்பையைக் கிளறிப் பார்த்தாள். அப்போது அந்தத் தீப்பெட்டி கிடைத்துவிட்டது. அதைத் திறந்து பார்த்தாள். அந்தக் குண்டூசி மனிதன் இருந்தான். அதை எடுத்துக் கொண்டு ஓடிவந்தாள். முதலில் அவனுக்கு ஒரு துளி தேன் கொடுத்தாள். அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் அருகில் இருக்கும் கிரகத்திலிருந்து வந்திருப்பதாகவும் யார் கண்ணிலும்படாமல் இருப்பதற்காகத் தன் வடிவத்தைச் சுருக்கிவிட்டதாகவும் சொன்னான். அவன் ஏன் தன் வீட்டுக்கு வந்ததாகக் கேட்டாள். அவள் தன்னைப் பத்திரமாக வைத்துக் கொள்வாள் என எண்ணி வந்ததாகக் கூறினான். அவன் என்ன செய்ய வந்திருப்பதாகக் கேட்டாள். அவளைப் போல் பல குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லவிருப்பதாகச் சொன்னான். அவன் இடத்தில் என்ன இருக்கும் எனக் கேட்டாள். உண்ண, உறங்க, விளையாட அருமையான இடம் இருப்பதாகக் கூறினான். தன் பெற்றோரை விட்டு தான் எப்படி வரமுடியும் எனக் கேட்டாள். அவள் எப்போதும் போல் இங்கும் இருப்பாள் எனவும் கூறினான். அங்கு எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டாள். எப்போதுமே அங்குதான் இருக்கவேண்டும் என்றான். அவளுக்கு அது ஏற்புடையதாக இல்லை. அவள் வரமுடியாது என்றாள். அவள் தூங்கும்போது அவளைத் தான் எடுத்துப் போய்விடப் போவதாகச் சொன்னான். குண்டூசி மனிதனைத் தீப்பெட்டியில் போட்டு வீட்டை விட்டு வெகு தூரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்துவிட்டாள். உறங்கப் போகும் போது தன் தாயிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். அவள் ஏதோ கனவு கண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டுத் தூங்கிப் போனாள். இரவு அவளால் தூங்க முடியவில்லை. அந்த அறையில் மாட்டியிருந்த அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள். அப்போது அந்தப் படம் ஜன்னல் வழியாகப் பறந்து போய்விட்டது.  

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...