Wednesday 13 October 2021

குறுங்கதைகள்-பூக்களின் தேவதை





பூக்களின் தேவதை அந்தக் குடும்பத்தில் வந்து மகளாகப் பிறந்தாள். அவள் பிறந்தவுடன் அந்தக் குடும்பத்தில் மிகவும் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் அந்தக் குடும்பத்தில் தேவதைக்குத் தம்பியாக வந்து பிறந்தவன் செய்த காரியங்களால் பூக்களின் தேவதை பெரும் துயரத்திற்கு ஆளானாள். சிறு குழந்தையாக இருக்கும் போதே பூக்களைத் தின்றுவிடுவான். இல்லை எனில் கசக்கிவிடுவான். பூக்களின் தேவதைக்கு இதைப் பார்த்து கண்களில் கண்ணீர் பெருகும். அவனுக்குச் சாபம் கொடுத்து இந்தக் காரியங்களை நிறுத்தியிருப்பாள். ஆனால் அந்தக் குடும்பம் துயரப்படும் என்பதால் விட்டுவைத்திருந்தாள். ஒரு நாள் அவன் செய்த காரியம் அந்தக் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தீபாவளி அன்று பட்டாசு கொளுத்திவிட்டு செடிகளுக்கும் பூக்களுக்கும் தீவைத்துவிட்டான். பூக்களின் தேவதைக்கு இனிமேலும் பொறுத்துக் கொள்ளக்கூடாது எனத் தோன்றியது. அவன் பள்ளி செல்லத் தொடங்கினான். பூக்களின் தேவதையும் அதே பள்ளியில்தான் படித்தாள். இவள் எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்கினாள். ஆனால் அவன் ஒரு பாடத்திலும் தேர்ச்சி அடையவில்லை. ஆசிரியர்கள் எவ்வளவு உருட்டி மிரட்டினாலும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. அவன் கவனம் எல்லாம் பூக்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைத் துன்புறுத்துவதில் மட்டுமே இருந்தது. ஒரு நாள் அவன் கனவில் பூக்களின் தேவதைத் தோன்றினாள். இனிமேல் பூக்களை, செடிகளை, விலங்குகளை, பறவைகளைத் துன்புறுத்தினால் அவனுக்குக் கண் பார்வை போய்விடும் என எச்சரித்தாள். அடுத்த நாள் காலையில் அவன் தாயிடம் சகோதரி தன்னைக் கனவில் அச்சுறுத்துவதாகப் புகார் கூறினான். தாயும் இனிமேல் அவன் அடங்கி நடந்தால் யாரும் பயமுறுத்தமாட்டார்கள் என்றாள். ஆனாலும் சகோதரி சொன்னதை உதாசினப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஆட்டிப்படைத்தது. அடுத்த நாள் பள்ளியிலிருந்து வரும் வழியில் மலை மீது ஏறி பூக்களைக் கசக்கத் தொடங்கினான். அப்போது பாம்பு போல் ஒரு பூ சீறியது. அவன் அஞ்சி வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான். அடுத்த நாளிலிருந்து அவனுக்கு ஜுரம் கடுமையாக வந்தது. அவன் பார்வை மங்கத் தொடங்கியது. சகோதரியிடம் மன்னிப்புக் கோரினான். பல பூச்செடிகளை நட்டு வளர்த்தான். அந்தப் பூக்கள் பேசத்தொடங்கின. தங்கள் மூதாதையர்களை அழித்த அவன் மீது சாபமிட்டன. கள்ளிச் செடியாக மாறிய அவன் பாலைவனத்தில் வளர்ந்தான். பூக்களின் தேவதையிடம் மன்றாடி தன்னை மீண்டும் மனிதனாக்க வேண்டினான். மனிதனாக்க முடியாது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் மலராக வேண்டுமானால் ஆக்க முடியும் எனக் கூறிவிட்டாள். கள்ளிச் செடியாக இருப்பதை விட மலராவதே மேல் என அவனும் அதை ஏற்றுக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பூவானான். 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...