Thursday 21 October 2021

குறுங்கதைகள்-வேட்டை





அவன் காட்டிற்குச் சென்று இறந்து கிடக்கும் விலங்குகளை எடுத்து வந்து புடம் போட்டு அவன் வீட்டின் அடுப்பகுதியில் வைத்துவிடுவான். அதுவும் இதுவரைக் கண்டிராத விலங்குகளை மட்டுமே எடுத்து வருவான். அதனால் அவை எப்போதாவதுதான் அவனுக்குக் கிடைத்தன. பறவைகள், பாம்புகள், போன்றவற்றையும் எடுத்துவந்திருக்கிறான். அன்று அவனுக்குக் கிடைத்தது ஓர் அதிசயமான உயிரினம். மனித உடலும் சிங்கத்தின் தலையும் வேறு ஏதோ பெயர் தெரியாத விலங்கின் முகமும் கொண்ட உயிரினம். அது மனிதனா என அவன் திருப்பித் திருப்பி ஆராய்ந்தான். ஆனால் அந்த உயிரினம் மனித உடலை மட்டுமே கொண்டிருந்தது. தலையிலிருந்து கழுத்து வரை வேறு ஏதோ உயிரினம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அதை வீட்டுக்கு எடுத்துவந்தான். அதைப் புடம் போட்டு வீட்டின் அடிப்பகுதியில் ஒரு பீடத்தின் மீது ஏற்றி நிற்கவைத்தான். அதனைச் சுற்றி மற்ற விலங்குகளை அடுக்கினான். மேலே பறவைகள் இந்தக் காட்சியைப் பார்ப்பது போல் வைத்துவிட்டு தன் அறைக்கு வந்து தூங்கிப் போனான். நள்ளிரவில் வீட்டின் அடிப்பகுதியில் ஏதோ வித்தியாசமான ஒலி கேட்டது. தன் கனவில் வரும் ஒலி என எண்ணித் தூங்கிப் போனான். காலையில் எழுந்து அடிப்பகுதிக்குச் சென்று பார்த்தான். பெரிய எலி போன்ற ஒரு விலங்கை வைத்திருந்தான். அது காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடினான். கிடைக்கவில்லை. ஏன் இப்படி நடந்தது என உறுத்திக் கொண்டே இருந்தது. அன்று இரவும் அதை எண்ணியபடியே தூங்கிவிட்டான். நள்ளிரவில் மீண்டும் அதே போன்ற ஒலி அடிப்பகுயில் இருந்து வந்தது. எழுந்து அமர்ந்து கூர்ந்து கேட்டான். விலங்குகள் ஓடுவது போல் கேட்டது. ஏதோ ஒரு விலங்கு ஓலமிடுவது போல் இருந்தது. அதன் பின் எல்லாம் அமைதியாகிவிட்டது. கீழே சென்றுபார்க்க அச்சமாக இருந்ததால் அமைதியாகப் படுத்து உறங்கிப் போனான். அடுத்த நாள் கீழே போய்ப் பார்த்தான். மற்றொரு கொம்பு முளைத்த குதிரை போன்ற ஒரு விலங்கு காணாமல் போயிருந்தது. இவனுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு உறங்காமலேயே அமர்ந்திருந்தான். அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அவன் அறைக் கதவு திறந்தது. அந்த மனிதனும் விலங்கும் இல்லாத உயிரினம் அவன் அறைக்குள் நுழைந்தது. அவன் அச்சத்தில் உறைந்து மயங்கிப் போனான். அடுத்தநாள் அந்த விலங்கு நின்றிருந்த பீடத்தில் அவன் உடல் நின்றிருந்தது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...