Saturday 16 October 2021

குறுங்கதைகள்-காற்று





அவன் காற்றில் கரைந்து சில காலம் ஆகியிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களைத் தேவையான இடங்களுக்குச் சென்று எடுத்துக் கொள்வான். யாருக்கும் அவன் வந்து போனச் சுவடே தெரியாது. அன்றாடம் தேவையானவற்றை இப்படி மறைந்திருந்து எடுத்துக் கொள்வதில் எந்தச் சிரமத்தையும் அவன் அனுபவிக்கவில்லை. அவனுக்கு விருப்பமிருந்தால் எந்த வாகனத்திலும் பயணம் செய்வான். இப்படி இருப்பது அவனுக்குள் சலிப்பை ஏற்படுத்தியது. தன் இருப்பை எல்லோருக்கும் காட்டி மிரள வைக்கவேண்டும் அப்போதுதான் ஓர் உற்சாகம் கிடைக்கும் என நினைத்தான். அப்போது அவன் ஒரு வீட்டைக் கடந்துகொண்டிருந்தான். அந்த வீட்டில் ஒரு குழந்தை அழும் குரல் கேட்டது. உள்ளே போனான். அந்தக் குழந்தை இவனைப் பார்த்தவுடன் சிரித்து கையாட்டியது. இவன் துணுக்குற்றான். யாரும் தன்னைக் காண முடியாத போது இந்தக் குழந்தை மட்டும் எப்படித் தன்னை அடையாளம் கண்டுகொண்டது என நினைத்தான். அந்தக் குழந்தையின் விளையாட்டு பொம்மைகளை இயக்கினான். குழந்தை அமைதியாக இருந்தது. ஒரு விமான பொம்மையை இயக்கிய போது குழந்தை குதூகலித்தது. பல கடைகளுக்கும் சென்று விமான பொம்மைகளை வாங்கிவந்தான். குழந்தை வளர்ந்தான். பல குட்டி விமானங்களை வடிவமைத்து இயக்குவதில் திறமையானவனாக இருந்தான். விமான ஓட்டியாகவும் அவன் ஆகிவிட்டான். இத்தனைக்கும் காற்றில் கரைந்திருந்த அவன்தான் காரணம் என்றாலும் அவன் அதை வெளிப்படுத்தவே இல்லை. விமான ஓட்டியான அந்த இளைஞன் விண்வெளிக்குப் போகும் வாகனத்தை வடிவமைத்து சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள இருந்தான். காற்றில் மறைந்திருக்கும் இவன் வெளிப்பட சரியான தருணம் அதுதான் என நினைத்தான். விண்வெளி ஓடம் கிளம்பியது. விண்வெளியில் அந்த இளைஞனின் உடலில் புகுந்து விடலாம் என இவன் திட்டமிட்டான். விண்வெளியில் பறந்து கொண்டிருந்த போது அதில் இருந்த மற்றொரு குட்டி விமானத்தில் ஏறிய அந்த இளைஞன் தான் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கப் போவதாகவும் அந்த விண்வெளி ஓடத்தில் அமர்ந்து தன் வடிவத்தில் அவனைத் திரும்பி வந்த வழியில் செல்லுமாறும் கூறிவிட்டான். இனி அவனைப் போல் காற்றில் கரைந்து தான் இருக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு அந்தக் குட்டி விமானத்தில் பறந்து சென்றுவிட்டான். 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...